Friday, May 29, 2015

பூங்கா நாற்காலி...........

ந்தப் பூங்கா 
நாற்காலியிடம் 
நீண்ட பட்டியல் உண்டு.. 

காதலன் காத்திருக்க 
ஐந்து பத்து நிமிடங்கள் 
கழிந்து காதலி 
வந்து சேர்வதும்.. 
சமயங்களில் 
காதலி காத்திருக்க 
அதே மாதிரி 
காதலன் வருவதும்.. 

அந்தக் 
காத்திருப்பின் 
லாகிரி 
பரஸ்பரம் அவர்கள் 
மாத்திரமே 
உண்கிற சுவாரஸ்யம்.. 

நிமிடங்கள் கழிந்து  
சற்றே அடர்த்தி கண்டு 
மணிகளாகி விடுகிற 
காத்திருப்புக்களும்  
அவ்வப்போது இருவருக்குமே  
நிகழும் தான் .. 
அப்போதெல்லாம் 
மன்னிப்பு எப்படி  
கேட்பதென்கிற ஒத்திகையோடு  
சந்தித்தாக வேண்டும்.. 

ஒத்திகை அரங்கேற்றம் ஆகையில் 
ஒத்துப் போவதும் உண்டு 
எடுபடாமல் ஊடல் அங்கே 
ஊடுருவுவதும் உண்டு.. 

பிற்பாடு ஊடல் 
கூடலாகும் வித்தை 
எல்லா காதலர்க்கும் கைவந்தகலை.. !!

சமயங்களில் இருவருமே 
வராமற் போகிற 
அதிர்ஷ்டமற்ற 
சாயங்காலங்களும்  அந்த 
நாற்காலிக்கு அமைவதுண்டு...

காதலில் வெற்றி தோல்வி காண்கிற 
அனுபவங்கள் காதலர்க்கு மாத்திரமே.. 

நாற்காலிக்குக் கிடைப்பதெல்லாம் 
காதலர்கள் மாத்திரமே... 

தண்ணி அடித்துக் கொண்டு வந்து 
நீட்டிப் படுத்துக் கொள்கிற நாதாரி 
ஒருவன் வருவதற்குள்ளாக  
புதியதாய் ஒரு காதல் 
ஜோடி வந்தமரக் காத்துக்  
கிடக்கிறது பூங்கா நாற்காலி.. !!

1 comment:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...