Wednesday, December 16, 2015

ஒரு பிரபல எழுத்தாளனின் வேண்டுகோள்..

எமது படைப்பின் இடைவெளி ஒவ்வொரு ரசிகனையும் வாட்டி வதைப்பதாக இருக்கும் பட்சத்தில், இடையறாத எமது எழுத்துப் பணி  செவ்வனே நிகழ்ந்த வண்ணமாக  இருந்திருக்கக் கூடும்..  
 
 ஆனால் அவ்வித துரதிர்ஷ்டங்கள் எமக்கில்லை., என்பதோடு இருக்கிற ஒற்றைக் கையளவு ரசிகர்கள் என்ன ஏதென்று கூட கேட்காத சுதந்திர எழுத்தாளனாக உலா வருவது பெருமிதம் எமக்கு.. 

அதென்ன ஒற்றைக் கையளவு ?.. 

அந்த ஒரே கையிலுள்ள ஐந்து விரல்கள் தாண்டி அடுத்த கையின் ஆறாம் விரலுக்குப் போகத் தேவை இல்லை, எமது ரசிக மணிகளின்  எண்ணிக்கை.. !

புகழ் ஒரு கஞ்சா அபினுக்கு ஒப்பான போதை.. அதிலே திளைக்கிற வசீகரம் கனவாயிருக்கிற வரைக்கும் தப்பிக்கலாம்.. அவை உண்மையாக மாறும் ஆரம்பத் தருவாய் வேண்டுமென்றால், ரம்மியம் பிய்த்து உதறக் கூடும்.. பிற்பாடு, ?.. 

என்னவோ புகழின் அனைத்துத் தாத்பர்யங்களையும் அக்கு வேர் ஆணி வேராக அறிந்தவன் போன்று, புகழ் குறித்து என்னென்னவோ நிறையப் பிதற்றப்  பிரயத்தனிக்கிறேன் .. ஹஹா.. 

"தோன்றின் புகழொடு தோன்றுக. அல்லவெனில் தோன்றாதிருத்தல் உத்தமம்" என்று ரெண்டடிக் குரளில் வேறு வள்ளுவன் உசுப்பேற்றுகிறான் 

புகழுக்கென்றே பணம் செலவு செய்கிற செல்வந்தர்கள் உண்டு. புகழும் செழுமைப் பட்டு அதனூடே செல்வமும் குவிகிற மகத்தான பிறவிகள் குறித்து  எமக்கொரு காழ்ப்பு, பொச்சரிப்பு என்பதை எல்லாம் தாண்டி சிருஷ்டித்தவனின்  பார்ஷியாலிட்டி மீது தான் அதீதக் கோபம் எனக்கு.. , இன்னும் பலர்க்கு...! 
[துணைக்கு கொஞ்சம் பேரை சேர்த்துக் கொள்வோம்]

இப்போதைய "கரண்ட்" புகழின்மை ஒழிந்து போய் , புகழ் எம்மை அண்டுகிற தருணம் அந்தப் பார்ஷியாலிட்டி மீதான கோபம் கழன்று போகக் கூடும்.. கடவுள் மீது பாசம் அபரிமிதம் சுரக்கக் கூடும். ஹஹ...

புற சூழல்கள் எம்மை  இவ்வித மேம்பாடுகள் அடைய வைத்தன.. இல்லை என்றால், அனாமதேயத்தின் பிடியில் சிக்கிச் சிதறுண்டு போயிருப்பேன்.. என்கிற யதார்த்தமான அச்சங்களும் சந்தேகங்களுமே மனிதனின் அகம்பாவம் அற்ற சிந்தனைகளாக இருக்க வேண்டும்.. 

ஆனால் அவ்வாறு அற்று, "தன்னை" சுயம்பென்று சிலிர்த்துத் திரிகிற தினவு கொண்ட பற்பல மனிதர்கள், அதுவும் குறிப்பாக அரசியல் வாழ்வினை சார்ந்து இருப்பவர்கள் .... 

மண்ணில் விளைந்ததைத் தின்று அந்த ஷக்தியிலே நமது அப்பன் விந்தில் நாம் ஜனித்தோம்.. நாமும் அதே விதமாகத் தான் நமது சந்ததிகளை ஈன்றோம்.. அதே மண் நமது அப்பாக்களை உள்வாங்கிக் கொண்டன.. அடுத்து நம்மை.. !!

இந்தப் பிராசஸ் ஐந்தறிவு ஜீவராசிகளின் கோட்பாடுகள் படி தான் நடக்கிறது. ஆனால், பீஸா -பர்கர் -ப்ரைட் ரைஸ் -புலாவு -கீ-ரைஸ்- நாண் -ரொட்டி -தந்தூரி -சிக்கன் ப்ரை - பிஸ் ப்ரை .. இதர இதர .. 
நமது ஆறாம் அறிவின் கற்பனைத்திறன் நிமித்தம் வாய்களுக்குப் பற்பல வகையறாக்களில் உணவுகளை அறிமுகப் படுத்துகிறோம்.. சில உணவுகளை கற்பனை செய்தாலே கூட,  நாவில் ஜொள் சுரந்து சட்டை நனைக்கிறோம் .. எவரேனும் இந்த அசிங்கத்தை கவனித்து விட்டனரோ என்று துணுக்குற்று சுற்றுமுற்றும் பார்த்து  கைக்குட்டையில் அவசரமாகத் துடைக்கிறோம் .. வாஷ் பேசின் ஓடி க்ளீன் செய்யத் துரிதப் படுகிறோம்.. 

ஆனால், ஒரு மாடு அன்று முதற்கொண்டு தட்டுப் போரையும் மசால் இலைகளையும்  புற்கள் கீரைகளை மட்டுமே அரவை போட்டுக் கொண்டு ஆனந்தமாக  வாழ்கிறது.. கட்டுத் தாரையில் எத்தனை சாணங்களை கவனிக்க நேர்ந்தாலும் முகம் சுழிக்கவோ மூக்கைப் பிடிக்கவோ நாம் செய்வதில்லை.. 
ஆனால், நம்முடைய மனித இனத்திலே ஒருவன் போய் விட்டு வந்த கக்கூஸுக்கு நாம் அடுத்து செல்ல நேர்கையில், அவனுடைய அசிங்கங்கள் அங்கே ஏதேனும் அடையாளமாக வீற்றிருக்கும் பட்சத்தில், வருகிற அசூயையும்  அவன் மீதான எரிச்சலும் சொல்லி மாளாது.. 

எதையோ சொல்ல என்று ஆரம்பித்து கதை எங்கெங்கோ போய் விட்டது.. தவறுதலாக எதையேனும் சொல்லி இருக்கும் பட்சத்தில் எமது ரசிகப் பெருமக்கள் மனமுவந்து  மன்னிக்க முன்வந்து மேற்கொண்டும் எம்மை ஆதரிக்க வேண்டுமாறு பணிவன்போடு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.. 
நன்றி மக்களே... !!

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...