Thursday, June 26, 2014

பெண்

2 வீலர் டிரைவ் தெரிந்த பெண் எதன் நிமித்தமோ ஓரமாக ஒதுங்கி நின்று மொபைல் பேசுவதைப் பார்க்கையில்..
பார்க்கிற எல்லாருக்குமே அது தவறாகப் படுவது துரதிர்ஷ்டமே..

கால் விரல்களில் மிஞ்சியும் கழுத்தில் மஞ்சக் கயிறும் இருந்தால், அவள் பேசுவது கள்ளக் காதலனோடு..
இவை எதுவும் இல்லை எனில் அவள் பேசுவது ஏதோ ஒரு பயலோடு..
இன்னும் அவள் சிரித்துக் கொண்டு பேசினால், அது இன்னும் சந்தேகமும் பொறாமையும் கிளப்புகிற சமாச்சாரங்கள் ..

புருஷனோடு குழந்தைகளோடு தோழிகளோடு ஒரு பெண் சிரித்துக் கொண்டு மொபைலில் பேசக் கூடாதா?..

அவளுக்கு அக்கா தங்கச்சி இல்லையா. அண்ணன்தம்பி இல்லையா.. அட, அவ்ளோ ஏன் , அம்மா அப்பா இல்லையா?..

ஆனாலும் அவள் வண்டியை ஓரங்கட்டிவிட்டு ஒய்யாரமாக செல்லை காதில் செருகி உரையாடுவது.காதலனோடு தான் என்கிற தீர்மானமான அனுமானம் தவிர்க்கமுடியாத கேவலமாக எல்லாரது மனங்களிலும் ஊடாடுவது எந்த வகை ?

இதே விதமாகத்தானே நமது வீட்டுப் பெண்கள் செய்தாலும் பிறர்க்குத் தோன்றக் கூடும்?..

பெண்களை இப்படி மையப் படுத்தி அவர்களை ஸ்கூட்டர் பழக்க விடாமல் இருந்தால், மார்கெட் போவதற்கும் ஸ்கூலில் இருந்து குழந்தைகளை அழைத்துவர  என்று எல்லா பிரச்சினைகளுக்கும் தாங்களே அல்லோல கல்லோலப் படவேண்டி  உள்ளதென்கிற அவஸ்தைகளால் "என்ன கருமம் வேண்டுமெனிலும் நடந்து  தொலையட்டும். நம்ம உசிரப்  புடுங்காம இருந்தான்னா சரி  "  என்கிற மனோபாவத்தில் இருக்கிற ஆண்களின் குணாதசியம் "தப்புச் செய்கிற" பெண்டிற்கு சவுகர்யமாகி விடுகிறது..

ஆனால் எவ்விதத் தவறுகளும் செய்யாமலே இப்படியான இழுக்கான சூழல்களை சந்திக்கிற அவலம் சில பெண்களுக்கு ஏற்படுகையில் அது தாங்கொணா  துயராக நமக்குப் புலனாகிறது..

அவர்களுக்கு வக்காலத்து வாங்க பீறிடுகிற அவாவை அழுத்தி வைத்துக் கொள்ளவேண்டி உள்ளது.. மீறி, சப்போர்ட் பண்ணினால் "மச்சானுக்கென்ன இம்புட்டு அக்கறை?" என்கிற  நக்கல் கேள்வியின் தர்மசங்கடம் தூக்கிவாரிப் போடுகிறது...

"வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைத்து"
"அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?" என்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.'

பாரதியின் அன்றைய அறைகூவல் இன்றைக்கும் சமயங்களில் செல்லாக்காசாகத்  தான் தெரிகிறது..

நம்முடைய பெருந்தன்மைகளும் நாகரீக செயற்பாடுகளும் நாசுக்கும்  இங்கிதமும்-- வெளிப்படுத்தப் படாத வகையறா உணர்வுகளாகவே நம்மில் இறுகி இறக்கிவைக்கப் படாத மூட்டைகளாகவே நம்மால் சுமந்து கொண்டிருக்கப் படுகிறது..

அவைகளெல்லாம் சரிவரப் பிரயோகிக்கப் பட்டால் மாத்திரமே பெண்களை இன்னும் கேவலமாக  சித்தரித்துக் கொண்டிருக்கிற இந்த சூழல்கள் மாறப் பெறும் ..

அதுவரைக்கும், ஆயிரம் பாரதிகள் கொக்கரித்தாலும் இம்மியளவு மாற்றங்கள் கூட நிகழும் வாய்ப்பில்லை..!!

Friday, June 20, 2014

நானும் அவளும் ...

[எனது டைரியில் 2 வருடங்கள் முன்னர் நான் எழுதி வைத்திருந்த சம்பவம் இது.. ]  

சற்றும் எதிர்பாரா அவஸ்தைகள் அவ்வப்போது..
நேற்று கோவிலொன்றில் ஸ்வாமி தரிசனத்திற்காக வரிசை கட்டி நின்றிருந்தார்கள்.. நானும்.. எனக்குப் பின்னே  நிறைவாண்டுக் கல்லூரி பயில்கிற ஓர் மாணவி... 
தரிசனம் நிகழ இன்னும் அரைமணி நேரம் உத்தேசமாக..
அதுவரைக்கும் எதற்காக மவுனம்?.. ஆகவே, அப்பெண்ணிடம் பேச்சு கொடுத்தேன்.. அவளும் அதை மிக விரும்பி இருக்கவேண்டும்.. சட்டென்று எனது கேள்விகளுக்கு பதில் கொடுக்கத் துவங்கி.. பிறகு, அவளும் என்னோடு தனது கேள்விகளை வைக்க ... சுவாரஸ்யம் பற்றிக் கொண்டன.. 

பரஸ்பரம் நன்கு பகிர்ந்து கொள்ள முற்பட்டதும் எனக்கு அரை மணி நேரம் போதாத விஷயமாயிற்று... ஆனால் காலம் சதி செய்யத் துவங்கி விட்டது.. வரிசை துரிதமாக நகர்ந்தது.. அரைமணி அரை நொடிக்குள் தீர்ந்துவிடக் கூடுமோ??..

ஆனால் காலத்தின் அடுத்த சதி மிகவும் கோரமானது.. 
வரிசையை ஒழுங்கு படுத்துகிற ஒரு பனாதி , "ஐயோ.. பெண்களுக்கு தனி வரிசை... உன்னை யாரும்மா ஜென்ட்ஸ் கூட நிற்கச் சொன்னது?" என்றான்.. 
எனக்கு எல்லாம் உடனே கழன்று விழுவது போன்று ஆகிவிட்டது.. 
அந்தப் பெண்ணுமே கூட இதை எதிர்பார்க்கவில்லை.. நான் அந்த ஆசாமியிடம் "சேர்ந்தாப்புல வந்துட்டோம். பார்த்து அட்ஜஸ்ட் செய்யுங்கள்" என்று கேட்டும் பிரயோஜனமில்லை.. "ஹஸ்பண்ட் ஒய்ப் வந்தாலே செபரெட்டா தான் வரணும் " என்றான் அந்த நாஜிப் படைக் காரன்.. 

ஒரு சங்கடப் புன்னகையோடு அவள் விடைபெற்றது எனக்குப் பேரிடியாக இறங்கிற்று.. 

பெண்கள் வரிசை சீனச்சுவர் போன்று நீண்டு கிடந்தது.. 
செய்வதறியா திகைப்பில் கையைக் காட்டிவிட்டு நான் அந்த ஆண்கள் வரிசைக்குள் முடங்கியது மகா முட்டாள்தனம்.. நானும் அவளோடு பெயர்ந்து போய் வெளியே தேநீர் அருந்த சென்றிருக்கவேண்டும்.. கூட்டம் அடங்கியதும் திரும்ப வந்து இருவரும் தரிசனத்தில் கலந்திருக்கவேண்டும்.. 
இந்த புத்திசாலித் தனமான அனுமானங்கள் உடனடியாக ப்ரவகித்திருந்தால் அது உண்மையாகவே  புத்திசாலித்தனம். ஆனால், இப்படி எல்லாம் சாவகாசமாகத் தோன்றிற்று...!

மற்றவர்க்கு நல்லதொரு சிநேகிதிகள் வாய்ப்பது சுலபக் கிரமமோ என்னவோ, எனக்கது  சமீப காலமாக குதிரைக் கொம்பாக மாறிவிட்டது.. இளமை வறட்சி கண்டு  அதன் சுவடுகள் பாம்புச் சட்டையாக உரிக்கப் பெற்று புதுப் பொலிவோடு  முதுமை துவங்கி ரெண்டொரு வருடங்கள் ஆகி விட்டதன் நிமித்தமோ  என்னவோ பெண்கள் என்னில் சுவாரஸ்யம் காண்பிப்பதில்லை இந்நாட்களில்.. நானும் அதன் வலி மிகுந்த நியாயங்களை  உணர்ந்து அதற்கென மெனக் கெடும்  சூழல்களைத் தவிர்க்கப் பழகிக் கொண்டிருந்தேன்.. ஆனால், இப்படி அரிதாக ஓர் சூழல் வாய்க்கப் பெற்று அதனை உடனே பழுதாக்கிய பெருமை  என்னையே சாரும்.. எதற்கு காலத்தின் மீது பழிபோட வேண்டும்? 

பிற்பாடு என்ன தோன்றிற்றோ என்னவோ அவசரமாக தரிசனம் முடித்துக் கொண்டு  அவளைப் பார்க்கிற அவாவில் அந்த அடர்ந்த நெரிசலில் அலைந்தேன்.. ம்ஹும் ... 
அவளது முகமே கூட குழம்பத் துவங்கிற்று.. கொஞ்ச ஷணம் தானே பார்த்தேன் அவளை?.. ஆனாலும் மறுபடி பார்க்க நேரும் பட்சத்தில் கண்டுபிடித்து விடுவேன் என்கிற நம்பிக்கை உறுதி எல்லாம் கிடந்தன அனாதையாக என்னிடத்தில். 

இதற்குள்ளாக இத்தனை இம்சை நிகழக் கூடுமென்கிற தீர்க்கதரிசனம் கிடைத்திருக்கும்  பட்சத்தில் அவளது பெயர் , மொபைல் எண் .. பேஸ் புக் .. வாட்ஸ் ஏப்  .. ஈமெயில் .. என்று ஏதாவது ஒரு கருமத்தையாவது கரந்திருப்பேன்.. எவ்ரிதிங் மிஸ்ஸிங்.. 

எனது கேள்விகளுக்கான பதில்களாக அவளும் ஏதேதோ சொன்னாள் .. ஆனால் ஒரு பெண் நீண்ட நாட்கள் கடந்து என்னோடு அளவலாவுகிறாள் என்கிற பிரக்ஞை எனக்குள் எதனையும் கிரஹிக்கவியலா ஓர் கிறக்கத்தை செவ்வனே  நிரப்பியிருந்தது.. 

ஒருக்கால் நான் அவளைத் தேடுவதை அவளும் கூட கவனித்திருக்கலாமோ?ஆனால் அப்படி  இருந்திருக்க   வாய்ப்பில்லை.. உடனே ஓடி எனதருகே வந்திருப்பாள் அன்றோ??
-அல்லது  என்னைப் போலவே அவளும் என்னை அந்தக் கூட்டத்தில் தேடி இருப்பாளோ??..

--எது எப்படியோ... 
இருவரும் இருவருக்கும் தொலைந்து போனோம்..!!

Monday, June 9, 2014

முற்பிறவி ஞாபகங்கள்..

[வழக்கமாக ஏதேனும் புனைந்ததற்குப்  பிறகு ஓர் சித்திரத்தைத் தேடி இங்கே இணைப்பேன்.. இந்தக் கவிதை வழக்கத்துக்கு மாறானது.. இந்த சித்திரத்தைப் பார்த்த பிற்பாடு , இதனை மையப் படுத்தி ஓர் கவிதை புனைய அவா கொண்டு சித்தரித்ததாகும்.. இவ்விதம் செய்கையில் கருத்தில் ஓர் ஆழமின்மையும் , செயற்கைத் தன்மையும் குடிகொண்டு விடும் என்பது எமது எண்ணம்.. ]


பரஸ்பரம் குடும்ப 

நபர்கள் யாவருக்கும் 
யாசிப்பதே தொழில்... 
ஒவ்வொருவரும் 
வெவ்வேறு  பிராந்தியத்தில்...!

முருகன் மலைக் கோவில் 

அடிவாரத்தில் அவளது 
வயோதிகப் புருஷன்.. 

ரயில்வே ஸ்டேஷனில் 

அவள்.. 

பஸ் ஸ்டாண்டில் மூத்தவன்..


சின்னப் பையனும் 

அவனுடைய அக்காவும் 
தெருத் தெருவாக 
கயிற்றில் நடக்கிற வித்தை.. 

சமய சந்தர்ப்பங்களில் 

குடும்பமே குழாமாக ஒன்றி 
செயல்படுகிற தருணங்களும் 
வாய்ப்பதுண்டு.. 
அது அநேகமாக 
மழைக் காலங்களில்...!!

இது ஈனப் பிழைப்பு 

என்கிற பிரக்ஞை எவர்வசமும் 
இதுவரைக்கும் வரவில்லை.. 

கண்தெரியாத நபர்கள் 
ஊதுவத்தி விற்கிறார்கள்.. 
ஊசிபாசி விற்கிறார்கள்.. 
கால் ஊனப் பட்டவர்கள் கூட 
எதையேனும் பொருள் விற்று 
பிழைப்பு நடத்துகிறார்கள்.. 
அவர்களோடு இவர்கள் 
சிநேகிதமும் வைத்திருக்கிறார்கள். 
--அவர்களிடும் பிச்சையைக் கூட 
ஆசையாசையாய் பெற்றுக் 
கொள்கிற ஸ்மரணையற்ற 
இந்த ஜடங்களின் மூதாதையர்கள் 
தான தர்மங்களில் சிறந்து விளங்கிய 
அரச வம்சத்தினர் ... 
அரண்மனை பல கட்டியவர்கள்.. 

இன்றைக்கு அவைகளில் 

பல அன்னச் சத்திரங்களாக 
மாறி இருக்கின்றன...

அன்றாடம் அங்கே 

வருகிற யாவருக்கும் 
விநியோகம் நடந்த வண்ணமே 
தானுள்ளது.. 

"இத்தன பேரு லைன்ல 

நின்னு பொறுமையா வாராங்க.. 
உங்க நாலு பேருக்கு மட்டும் 
என்ன கேடு?" என்று 
நாக்கைப் பிடுங்குவது போல 
யாராவது இவர்களைக் கேட்கிற 
விதமாகத் தான் இவர்கள் 
நடந்து கொள்வார்கள்.. 

"இந்த சத்திரமே நாங்க போட்ட பிச்சை..

எங்க கிட்டயேவா?" என்று மௌனமாகக் 
கேட்டுக் கொள்கிறான் அந்தக் கயிற்றில் 
நடக்கிற சின்ன மகன்.. 

சென்ற பிறப்பின் அரசன் 

 என்கிற மங்கலான ஞாபகக் கீற்று 
அவனை அவ்விதம் கேட்கத் தூண்டியதோ??

Tuesday, June 3, 2014

வன்மம் மனிதம் அன்று..

ணர்வுக் குழப்பங்கள் என்பன குடும்பங்கள் எங்கிலும் இயல்பாக ஊடுருவிக் கிடக்கிற சமாச்சாரம்...
சற்றும் எதிர்பாரா சம்பவங்களுக்கு மனஸ்தாபம்.... அவை நிமித்தமாக, பல வாரங்களாக மாதங்களாக .. ஏன் , வருடங்கள் என்று கூட அடர்த்தி கொண்டு விடும் இந்த மனஸ்தாபங்கள்.. ஆளாளுக்கு முகங்களைத் தவிர்த்து விடுதல், மற்றும் பேசுவதென்பதே மருந்துக்குக் கூடக் கிடையாது.. பரமவைரிகள் போன்று முறுக்கிக் கொண்டே..
பிற்பாடு ஓர் தருவாயில், மிக சகஜமாக பேச நேர்வது, .. "அட, இந்த அற்ப பிரச்னைக்கு இத்தனை காலம் நட்பை தள்ளிப் போட்டு விட்டோமே" என்கிற பரஸ்பர பகிர்தல்கள்..

இன்னொன்றும் இருக்கிறது.. "பெரிய பிரச்சினை வருவதற்கான எல்லா தகுதிகளும் இந்த சம்பவத்துக்கு உண்டு " என்கிற அனுமானத்தோடு அணுகப் படுகிற அந்த சம்பவம் மிக சாது போல சுலபத்தில் நடந்தேறி விடும்.. எதிர்பார்த்த எவ்வித கோர அனுபவங்களையும் நமக்குள் நிகழ்த்தாமல், வெறுமே மிக யதார்த்தமாக நழுவி விடக் கூடும்.. "வாவ்.. " என்று வியக்கக் கூடும் நாம்..

பரஸ்பர புரிதலில் அவ்விதம் நிகழ்ந்ததா அல்லது காலம் அவ்விதம் நிகழ்த்தியதா என்கிற இன்பக் குழப்பம் இருதரப்புக்கும்..
வாய் வார்த்தைகளில் தான் உள்ளன எல்லா சாதுர்ய சாமர்த்தியங்களும்..
எதிர்புறம் வம்படியாக பேச்சு வந்து விழுந்தால் கூட சகஜ நிலையில் அதனை எதிர்கொண்டு சிநேகமாக கைகுலுக்குகிற லாவகத்தில் அணுகுவோமேயாயின் .. அந்த நெருப்பு அணைக்கப் படும்.. எதிர்புறம் நன்கு சீரமைக்கப் படும்.. அங்கேயும் புன்னகைப் பூக்கள் மிளிர்வதற்கான சாத்தியக் கூறுகளை சந்தர்ப்பங்களை அளிக்க வேண்டியது ஒரு தரப்பிலாவது கடைப் பிடிக்கப் பட வேண்டியது அவசியம்..

ரெண்டு ஆடுகளும் சண்டையிட்டு ரெண்டும் ஆற்றில் விழுந்து அடித்துக் கொண்டு போவதை விட வழிவிடுகிற போக்கு ஒரு ஆட்டுக்காவது தெரியுமாயின் இரண்டு ஆடுகளும் பிழைத்துப் போய் இன்னும் கிஞ்சிற்று காலங்கள்  வாழும் தகுதி பெறும் .. இது ஒண்ணாப்பு பாடத்துல வரக்கூடிய மாரல் ஸ்டோரீஸ் ..


மனிதர்களைத் திருத்திக் கொள்ள தேவைப் படுகிற ஆடுகள், மட்டன் பிரியாணிக்கும் உதவுகின்றன.. !!


ஆறறிவு அளிக்கப் பட்டுமே கூட விட்டுக் கொடுத்தல் என்கிற பண்பாடு மனிதர்கள் மத்தியில் இன்னும் மயக்க நிலையில் தான் உள்ளது..
"என்னை விடவாடா நீ?" என்கிற ஈகோ .. "நீ என்னடா பெரிய இவனாடா?" என்று காலரைப் பிடிக்கத் துறுதுறுக்கிற முறுக்கம் ... 

இவ்வித வன்மங்களினின்று மீண்டு சகஜ நிலையில் ஒரு காரியத்தினை அணுகி அவைகளை மென்மையாகக் கையாள்கிற பக்குவம் வரும் பட்சத்தில் தான்  அங்கே மனிதம் தழைத்து நிற்பதாகப் பொருள்.. 

அல்லவெனில், குரோதங்களும் ரத்தக் களறிகளும் வலிகளும் பெரும் இழப்புக்களும், அதன் நிமித்தமான சோகங்களும் அழுகைகளும்.. பிறகு மேற்கொண்டு  பழிவாங்குகிற ஓர் ரவுத்திரம் முளைப்பதும்.. இதுவா வாழ்க்கை? .. சில காலமே வாழ அனுமதி உள்ள இந்தப் பிரபஞ்சத்தில் எதற்கு இப்படி ஓர் வெறியாட்டம்?.. 
அற்பாயுளில் ஒழிந்து விடுவதும், உடலிலும் மனத்திலும் வலிகளோடு வயோதிகம் வரைக்கும் அழுந்திக் கொண்டிருப்பதும்... 
சீராக நமக்கெல்லாம் அளிக்கப் பட்ட இந்த வாழ்வினை, எதற்காக இப்படி முரண்களோடு தரிசிக்க விழைய வேண்டும்??

நமது கற்பனைகளும் செயற்பாடுகளும் சமாதானங்களை மையப் படுத்தி நகர்தல் வேண்டுமேயன்றி, சண்டையிட்டு சாதிக்க வேண்டுமென்கிற விவேகமற்ற வெறி நம்மை விட்டுக் கழன்றோட வேண்டும் .. 


யோசித்துப் பாருங்கள்.. சண்டையிட்டு இருதரப்பும் ஜெயிக்கப் போவதில்லை.. ஒரு தரப்பு கத்திக் குத்துப் பட்டு ரத்தவெள்ளத்தில் சாய்ந்து அதே ஷணத்தில் மாய்ந்து போக நேரும்.  இன்னொரு தரப்பு மற்றொரு நாள் பழிவாங்கப் பட்டு கதறிச் சாக நேரும்.. 


சமாதானமாகப் போவதோ, இருதரப்பும் இன்னும் கொஞ்ச காலம் நிம்மதிப் பெருமூச்சோடு வாழ்ந்து அமைதியாக சந்தோஷமாக மனநிறைவோடு மரணம் தழுவலாம்.. 


யோசித்து செயல்படுங்கள் மனிதர்களே.. 


Monday, June 2, 2014

ஊட்டி மலர் கண்காட்சி

ன்று உதகை சென்று வந்தேன்... மலர் கண்காட்சியின் நிறைவு நாள் இன்று.. 2ஆம் நாளான நேற்று மழை சோ வென்று கொட்டித் தீர்த்ததாம்.... அதற்கான சுவடுகளாக புல்வெளி எங்கிலும் சகதி  நிரம்பி காணப் பட்டது...

அந்த அடர்ந்த பொட்டானிக்கல் கார்டன் எங்கிலும் வியாபித்திருந்த ஜனத்திரள் கண்கொள்ளா காட்சியாக படர்ந்து கிடந்தது. குதூகலக் குழந்தைகளின் கும்மாளக் குதியாட்டங்களும் பெரியவர்களின் உற்சாக அரட்டைகளும்.. இளசுகளின் பரஸ்பர சைட்டுகளும் .. யாவற்றையும் ஓர் தொண்டுக் கிழம் போல ஓர் ஓரமாக அந்த ஈரம் படர்ந்திருந்த புல்வெளியில் அமர்ந்தவண்ணம் கவனித்து சுகந்தமுணர்ந்தேன்..

நாம் கடந்து வந்த இளமை இத்தனை பொலிவாக இருந்ததில்லை.. அது ஓர் இனம்புரியா வெறுமையிலும், அற்பக் கனவுகள் கூட நிறைவேறாத கவலைகளிலும் .கழிந்தன.

புரிந்தோ புரியாமலோ அன்றைய காலகட்டங்களில் நம்முடைய பிரத்யேகமான ரசனைகள் மறுதலிக்கப் பட்டன.... ஆசை ஆசையாய் ஏதேனும் புனைந்து , பாராட்டப் பெறும்  என்கிற அனுமானத்தில் காண்பிக்கப் பட்ட போது சற்றும் எதிர்பாராமல் அனேக விஷயங்கள் புறக்கணிப்புக்கு உள்ளாகி, நம்முடைய கற்பனைத் திறனையே முடக்கிப் போட்டிருந்தன..

ஆனால் இன்றைக்கு எல்லாம் தலைகீழ்.. குழந்தைகளின் யாதொரு கோரிக்கைகளும் பரிசீலிக்கப் படுகின்றன.. ஏற்றுக் கொள்ளப் பட்டு அங்கீகரிக்கப் பெறுகின்றன.. அவைகள் அந்தக் குழந்தைகளுக்கு ஓர் தாங்கொணா மகிழ்வை , மனநிறைவை அளித்து மேற்கொண்டு இன்னும் பல புதுமைகளைப் புகுத்துகிற திறன்களும் அதிகப் பிரசங்கங்களும் ஆக்கிரமிக்க ஏதுவாகின்றன..

ஓ .. நான் இந்த ஊட்டி தாவரவியல் பூங்கா அழகை வர்ணிக்க ஆரம்பித்து , நம்முடைய  நாறிப் போன பிரச்சினைகளைக் கிளறி, மறுபடி மூக்கைப் பிடிக்க நேர்கின்றன.. மன்னிக்கவும்..

இந்தத் தாவரவியல் பூங்கா, சொர்க்கத்தின் உதாரணமாகப் புரிபடுகிறது.. ஒவ்வொரு முறை வருகையிலும்... கூடிக் குலவி ஆடிப் பாடித் திரிகிற இந்த மக்கள் குழாமை தரிசிப்பது என்னவோ எல்லாருமே சொர்க்கவாசிகள் போன்று எனக்குத் தோன்றும்..

[டிராப்டில் இருந்த இந்த எனது உதகைப் பயணப் பதிவை சற்று தாமதமாக பிளாகில் பதிவிறக்கம் செய்ய நேர்வது .. ஒருக்கால் அந்த சம்பவத்தின் சாரத்தைக்  குறைத்துக் காண்பிக்க நேருமோ என்றோர் சந்தேகம் எனக்கு .]

நம்பிக்கைவாதி..

சாதிக்காதவனின் 
சம்பாதிக்காதவனின் 
வலிகள் 
மிகுந்த துயரும் 
குற்ற உணர்வும் நிரம்பியவை.. 

அவன் தேடுகிற 
ஆறுதல் வார்த்தைகளும் 
தன்னம்பிக்கை தூண்டுகிற 
புத்தகங்களும் ஏராளம்.. 

அவனது வயதொத்தவர்களும் 
அவன் வயதில் பாதியே 
நிரம்பியவர்களும் 
ஈட்டுகிற 
பொருளும் செல்வமும் 
புகழும் இன்னபிற 
உயர் அடையாளங்களும் 
அவனில் ஓர் தாங்கொணா 
தடுமாற்றத்தை 
நிலைகொள்ளச் செய்வதை 
எக்காரணம் கொண்டும் 
தவிர்ப்பதற்கில்லை.. 

இவ்வளவு இம்சைகளை 
காலவளர்ச்சி அவனில் 
விதைக்கக்  கூடுமென்று 
அவன் கிஞ்சிற்றும் 
அனுமானித்தவனில்லை...!!

எதிர்பார்த்திருந்தால் கூட 
இந்த சூழல்களை சுலபமாக 
எதிர்கொண்டிருந்திருப்பான்.. 

மிகப் பெரும் விபத்தாக 
நேர்ந்தமையால் 
பிறப்பின் மீதும் 
தன்னைப் பிறப்பித்தவர்களின் 
மீதும் ஓர் இனம்புரியா 
காழ்ப்பை செருகி வைத்திருக்கிறான்.. 

ரயில்களின் பெயரையோ 
கிணறுகளின் பெயரையோ 
பாழாக்குகிற உத்தேசம் 
அவனுக்கு இல்லையாதலால் 
அவனது தற்கொலைகளுக்கு 
அவைகளை இழுக்க 
அவனுக்குப் பிடிக்கவில்லை.. .!!

ஜெயிப்பதற்கான வாய்ப்பு 
இன்னும் ஓயவில்லை 
என்கிற சிந்தனை அவனில் 
ஓர் வற்றா ஜீவா ஊற்று போல 
எப்போதும் இதயத்தின் ஒரு 
மூலையில் அவனில் 
குடிகொண்டுள்ளது.. 

அந்த நம்பிக்கையில் 
தான் , ரப்பர் பென்சிலுக்கு 
அடம்பிடிக்கிற தனது 
மகளின் பிஞ்சுக் கையைப் 
பற்றிக் கொண்டு 
பக்கமிருக்கிற கடைவீதிக்கு 
நடந்துபோய்க் கொண்டிருக்கிறான்.. !!!

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...