Saturday, February 23, 2013

பொய்மைகளின் அணிவரிசை...

ல்லை இல்லாதது
போன்ற பாவனைகளுடனே
எல்லாமும்
பயணிக்கின்றன...

நாளைக்குச்
சாவது தெரியாமல்
நானூறு
கணக்கு வழக்குகள்
மனசுக்குள்...

இன்றைக்கே
செத்துவிடுவோமென்று
இருக்கிற யாவற்றையும்
ஒப்படைத்தாலோ,
-அப்படி நடந்து
வருடம் ரெண்டாகியும்
சாவதாகக் காணோம்..
ஆகவே கொடுத்ததை
வாபஸ் கேட்பதாக
ஓர் தர்மசங்கடமான
உத்தேசம்...

இரும்பென
இறுகிக் கிடந்த காதல்
கடலுப்புக் காற்றில்
துருப் பிடித்து
உதிர்ந்து விடுவதும்...

வேண்டா வெறுப்பாக
செய்து கொண்ட கல்யாணம்
பிள்ளை ரெண்டு
பெற்றும்
சுவாரசியம் துவண்டு
விடாத அதிசயமும்...

இவ்வளவு
முரண்களோடு
நிரம்பி வழிகிறது
இந்தப் பிரபஞ்சம்..

உயரம் சென்று
இந்த மனித இயக்கங்களை
கவனிக்கையில்
பொத்தாம் பொதுவாக
எல்லாமே சுபிக்ஷம்
என்கிற விதமாக
ஓர் மாயை ஊடாடுவதை
தரிசிக்க முடிகிறது.

பூமிக்கு வந்து
ஓர் ஆடவனை
விசாரிக்கையில் ...
வாழ்க்கை அவனுக்குப்
பீதியில் பிய்ந்து
போய் கிடக்கிறது..

ஓர் ஸ்திரீயை
விசாரிக்கையில்
நைந்து போய்
நாறிக் கிடக்கிறது...

ஆனால் அவன்
சட்டையை இன் பண்ணி
டை கட்ட மறக்கவில்லை..
அவள்-
லிப்ஸ்டிக்கை
உதடுகளில் தோய்த்து
கால்களுக்கு ஹைஹீல்ஸ்
போட மறக்கவில்லை..!!

Wednesday, February 13, 2013

ஓ .. வினோதினி..

அவனது 
காதலமிலத்தை 
உன் மீது 
அவனால் 
வீசமுடியவில்லை...
உன் மரணம் 
எங்களது மனங்களில் 
ஏற்படுத்தியிருக்கிற 
ரணம்,
உன் அமிலக்                            
காயங்களைக் 
காட்டிலும் வலிகள் 
நிரம்பியவை...

இந்த சம்பவத்தின் 
நிமித்தம்                                  
எங்களில் நிகழ்ந்துள்ள 
அமில மாற்றம் 
அந்த நைட்ரிக் 
அமிலத்தைக் காட்டிலும் 
வீரியமிக்கது...

உன்னைத் துவம்சம் 
செய்தவன் மீது 
வாரியடிக்கும் 
வெறியிலிருக்கிறோம்...!!

Monday, February 11, 2013

விஸ்வரூபம் ... விமரிசனம்???

படம் ரிலீசான ஏழாம் தேதியில இருந்து "ஐயோ.. பார்த்துடனுமே... மறுபடி எங்கியாச்சும் பான் பண்ணிட்டாங்கன்னா வம்பா போயிடுமே " என்றெல்லாம் ரொம்ப பீல் பண்ணி, எப்டியோ இன்னைக்குப் போயி பார்த்தே பார்த்துட்டேன்..

நானும் மனைவியும் பாப்பாவை அழைத்துக் கொண்டு போகணும் என்பதாகத்தான் திட்டம்... ஆனா கடவுள் ரொம்பக் கருணை உள்ளவர்னு நினைக்கிறேன்.. "பாப்பாவுக்கு ஒடம்பு கொஞ்சம் சரி இல்லைப் போல இருக்கு.. பார்த்துட்டு நாளைக்குப் போகலாம்" சொன்னாலோ இல்லையோ, "சரி, மொதல்ல நான் போயி ஒருக்கா பார்த்துட்டு வந்துர்றேன்.. பெறகு நீ நான் பாப்பா போலாம்" ன்னு சொன்னேன்..

தனியா போயி பார்த்தது ரொம்ப நல்லதா போச்சு.. அவுகளக் கூட்டியாந்திருந்தா நொந்து நூடுல்ஸ் ஆகி இருப்பாங்கன்னு நெனைக்கிறேன்..

எதுக்கு கமல் இவ்ளோ தீவிரமா யோசிச்சு "அல் - கொய்தா" இயக்கம் பற்றி எல்லாம் ரொம்ப ஆராய்ச்சி பண்ணி, ஆப்கானிஸ்தான் போயி ஷூட் பண்ணி, நம்மையும் ஒரு ரெண்டு மணி நேரம் ஒரு விபரீத இடத்துக்கு அழைத்து சென்ற ஓர் தத்ரூபத்தை ஏற்படுத்தி .. இம்சித்து விட்டாரென்றே எனக்குத் தோன்றுகிறது..

ஓர் அலி போன்ற தோற்றத்தில் தோன்றி , கதக்கலியோ குச்சிப்பிடியோ ஆடி, அய்யர் பாஷை பேசி, ஒரே பாட்டை பாடி, மனைவி போல ஒருத்தியும், தோழி போல ஒருத்தியும்..

அந்த சூழ்நிலைகளை கிரகித்துக் கொள்ளவே ஓர் பிரத்யேக அறிவு அவசியப் படுகிறது.. பொத்தாம் பொதுவாக எவரைக் கேட்டாலும் "படம் சூப்பர்" என்று ஓர் ப்ரெஸ்டீஜ் இஷ்யு வுக்காக எல்லாரும் சொல்லி விட்டார்களோ என்று கூட எனக்கொரு சந்தேகமுண்டு.. "ஒன்னும் பிடிபடலை", "படம் அறுவை" என்றெல்லாம் சொன்னால்  முட்டாள் என்று சொல்லி விடுவார்களோ என்று பயந்தே அநேகம் பேர்கள்  இந்தப் படம் குறித்து பொய்யாகவாவது பாசிட்டிவாக  பேசி விட்டார்கள் என்று அனுமானிக்கிறேன்..

தைரியமாக நான் சொல்கிறேன்.. "எனக்கு விஸ்வரூபம் பிடிபடலை"... இதை சொல்ல  எனக்கென்ன வெட்கம்?..

இப்படி ஓர் நெளிவு சுழிவான திரைக் கதையைப் புரிந்து கொள்கிற டெக்னிக்கல் புத்தி  உள்ள நபர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.. ,மற்ற அப்பாவி ஆடியன்ஸை  கமல் அம்போ வென்று விட்டு விட்டார்..
என்னவோ நாங்கெல்லாம் அதிகபட்சம் அறுபது எழுபது ஆயிரங்கள் போட்டு ஓர் பைக்கை வாங்கி ஓட்டுகிற தகுதியில் மட்டுமே இருக்கிறோம்..

அய்யா கமலஹாசா.. நீர் பாட்டுக்கு ஒரு பாரீன் மேட் பைக்கை, அதுவும் லிட்டருக்கு  பத்து கிலோமீட்டர் கிடைக்கிற முப்பது லட்சம் நாற்பது லட்சம் மதிப்புள்ள பைக்கை வந்து  பந்தாவாக ஓட்டிக் காண்பித்தால், வாயில் ஈ புகுவது கூடப் புரியாமல் "பே" வென்று வேடிக்கை பார்த்து வியக்கிறோம்..

சும்மா தடாலடியாக குண்டுகள் வெடிக்கின்றன.. நம்ம படம் பார்க்கிற தியேட்டர் சீட்டுக்கடியில் குண்டு  வைத்தது மாதிரி சும்மா அதிருதில்ல?

யதார்த்தமாக சொல்லப் போனால், ஒரு ஆங்கிலப் படம் கூட வெடுக்கென்று புரிந்து விடும் போலிருக்கு.... , ஆனா, இந்த வி.ரூபம்    ம்ஹ்ம் ..

பலமுறை இந்த விஸ்வரூபத்தை யூ டியூபில் ட்ரைலர்களாக கண்டு களித்து விட்டேன்.. அந்த ஆர்வத்தில் இந்தப் படத்தைப் பார்க்கப் போனால், படம் முழுக்கவே ரெண்டரை மணி நேரங்கள் ட்ரைலர் பார்க்கிற உணர்வே வியாபித்ததே அன்றி முழுநீளமாக ஓர் படத்தை பார்த்த உணர்வே இல்லை ...

இதன் கதைத்தளமும், சம்பவங்களுக்கான வேர்களும், கிளைகள் விட்டுப் படர்ந்திருக்கிற  ஆப்கானிஸ்தான் தான்...
ஓர் பயங்கரவாதி ஒசாமா பின்லாடனை செய்திகளில் புரிந்து கொள்வதை மாத்திரமே நமக்கெல்லாம் நடைமுறை சாத்தியமாயிற்று... அவனது சூழல் குறித்தோ, அந்த அல்கொய்தா பயிற்சி மையம் குறித்தோ ஓர் அனுமானப் பிரக்ஞையோடு மாத்திரமே நம்மால் இருக்க முடிந்தது.., பிற்பாடு அவன் செத்துப் போன பிறகு அந்தப் பிராந்தியம் நமது சிந்தனைக்கே முரண் பட்டதாகவும் சம்பந்தமற்றதாகவும் நம்மிலிருந்து கழன்று விட்டொழிந்து விட்டதென்பதே  எல்லாருக்குமான யதார்த்த நிகழ்வாக இருந்தது..

ஆனால் ஓர் மெல்லிய கலைஞனாக உள்ள கமலஹாசனுக்கு அந்த விபரீத நிதரிசனத்தை , நிஜத்தில் சென்று தரிசிக்கவும் அதனையே தனது படத்திற்கான கதைக் களமாக மாற்ற வேண்டுமென்கிற எண்ணங்களும், அதனை செவ்வனே  செயற்படுத்திய  விதமும் பிரம்மிப்பும் பெருமையும் ஒருங்கே நம்மில் மிளிரச் செய்கிற விஷயங்களாகும் ..!

ஆனால், இந்த யுத்த சம்பவங்கள் நடக்கிற களத்திலே , அவர்கள் பரிமாறிக் கொள்கிற விவாதங்களும், போடுகிற திட்டங்களும், நடைமுறைப் படுத்துகிற சண்டைகளும், என்னால் ஓர் யூக அடிப்படையில் தான் ரசிக்க முடிந்ததே அன்றி திட்டவட்டமாக இன்னது தான் பிரச்சினை என்கிற விதத்தில் காட்சிகளை அணுக முடியாதது  பெரிய அவஸ்தை என்றே சொல்வேன்..

இப்படி படம் நெடுக ஓர் மாயை சூழ்ந்து அந்த ரெண்டரை மணி நேரங்கள் நழுவியது புரியவில்லை என்ற போதிலும் அத்தனை ஆழமாக லயித்து விடுமளவு  ஓர் புரிதல் இருந்ததா என்பது மிகப் பெரும் கேள்வி தான்..

எல்லா கோணங்களையும் இந்தப் படத்தில் கிரகித்துக் கொண்ட நபர்கள் நிச்சயம் இருப்பார்கள் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.. குறிப்பாக, காலம்  சென்ற எழுத்தாளர் சுஜாதா போன்றவர்கள் இதனை மிகத் துரிதத்தில்  உறிஞ்சி  ஐ மீன் ABSORB செய்திருப்பார்கள் என்றே கருதுகிறேன்..

அப்படி ஓர் வீச்சோடு இயங்க முடியாத எனது மூளையை நான் சபிக்கிறேன்.. எனது சுயத்தையே  வெட்கத்தோடு பார்த்து நகைக்கிறேன்.. .
நன்றி..
                                                                                                                                                                                                                                                  

Saturday, February 9, 2013

நடைப் பயிற்சி

நடைப் பயிற்சி 
தினமும் வீதிகளில்..
அங்கங்கே
செத்துக் கிடக்கிற
எலிகளின் பெருச்சாளிகளின்
ஈ மொய்க்கிற உடலைக்
கொத்திக் குதறி
மார்னிங் ப்ரேக்பாஸ்ட்டை
முடித்துக் கொள்கிற
காகங்கள்... அவைகளை
விரட்டி அதிகாரம்
செய்கிற நாய்கள்..!!

முகச்சுழிப்போடு
நடக்க வேண்டிய
எனது பயிற்சிகளை
பள்ளி மைதானங்களில்
மாற்றிக் கொள்கிற
உத்தேசம் பலமுறைகள்
வந்து அதை செய்ய
முனைந்தாலும்
சுற்றி சுற்றி அதே
வலம் வருவதை
மிகவும் சலிப்பாக
உணர்கிறது என் மனம்..

ஆகவே,
அவ்வப்போது சற்றே
அருவருப்பு சூழல்களை
தரிசிக்க நேர்ந்தாலும்
மாற்று வீதிகளையே
நாடுகின்றன என் ரசனை..

உடல் உபாதைகளின்
நிமித்தம் நடந்தாக
வேண்டிய பிரச்சினை
ஓடிப்போய், இங்கே
ரசனை வந்து
அப்பிக் கொள்வது
அனாவசிய அவஸ்தை
என்றே கொள்கிறேன்..

Thursday, February 7, 2013

கமலஹாசன் விஸ்வரூபம் .....

கடந்த ஐம்பது ஆண்டுகளாக .., வரலாற்று தொனியில் சொல்ல வேண்டுமானால், அரை நூற்றாடு காலமாக சினிமா உலகில் கொடிகட்டிப் பறக்கிற ஓர் பிரபல கமலஹாசனுக்கு தனது சொந்த தயாரிப்பில் உருவான ஓர் திரைப்படத்தை வெளியிட நேர்ந்த சமீபத்திய சிரமங்கள் உலகெங்கிலும் யாதொருவரும் அறிவர்...

இந்தத் தடைக்கு பின்புலமாக செயல்பட்டது அதே சினிமா உலகம் சார்ந்த நபர்கள் என்றும், இஸ்லாமிய அமைப்புகள் என்றும், தமிழக முதல்வர் என்றும் பலவாறாக ஊகங்கள் வரையறுக்கப் பட்டு உலவி வந்தன.. ஆனால் காரணம் இன்னதென்கிற தெளிவு, இந்த விஷயம் சார்ந்த கமல், மற்றும் இன்னபிற சிலருக்குமே புரிந்திருக்கும்... மற்றபடிக்கு பொதுமக்களும் மீடியாக்களும் வெறும் அனுமானங்களை மையப் படுத்தி வதந்திகளை பிரம்மாதமாகப் பரப்பிக் கொண்டு வந்தனர்...

ஏழு காட்சிகளை நீக்கிவிட்டு ஏழாம் தேதி வெளியாக உள்ளது.. அவை காட்சி நீக்கமா, அல்லது வசன நீக்கமா என்பது படம் பார்க்கிற போது தெரியும்...

வெளிநாடுகளிலும் வெளிமாநிலங்களிலும் இந்தப் படத்தை ரசித்தவர்கள் தங்களின் விமரிசனத்தை மிகவும் புளகித்து சொல்லக் கேட்கையில் உடனே சென்று பார்க்க வேண்டுமென்கிற அவா பீறிடுகிறது.. 

என்ன கேவலமென்றால் ஓர் தமிழன் எடுத்த ஓர் தமிழ்படம் தமிழ்நாட்டில் வெளியாகாமல் மற்ற இடங்களில் வெளியாகி அங்கு சென்று ரசிகர்கள் பாக்க வேண்டிய கொடுமை அரங்கேறி இருப்பது மனசைப் பிசைகிற அவஸ்தை...
மறுபடி இவ்விதம் ஓர் கேவலம் நிகழாமல் இருக்கவேண்டும் என்று எவரையும் கேட்க முடியாது.. எவரைக் கேட்க வேண்டுமென்றே புரியவுமில்லை..ஆகவே, இப்படி ஓர் அசிங்கம் மேற்கொண்டு நிகழக் கூடாது என்று பொத்தாம் பொதுவாக பிரார்த்தித்துக் கொள்ள மாத்திரமே முடியும்.. அதனை நாம் எல்லாரும் செய்வோமாக..!! நன்றி..



Sunday, February 3, 2013

கிறுக்குப் பயபுள்ள எழுதின கதை ...

புலி சிங்கம் உலவுகிற காடுகளில் நான் அவ்வப்போது சென்று  வசிப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளதை உங்களிடம் தெரிவிப்பதை அவசியமென்றே கருதுகிறேன்...

என்னைக் கடிக்க வருகிற புலிகளை அங்குள்ள சிங்கங்கள் அனுமதிப்பதில்லை... சிங்கங்கள் என்னைக் கோபித்துக் குதற வருகையில் அங்குள்ள மான்கள் என்னைக் காப்பாற்றி விடுகின்றன சாமர்த்தியமாக.

தெரியாத்தனமாக எறும்புப் புற்றில் கால் வைத்துவிட நேர்கையில் என்மீது ஊர்ந்து வந்து கடிக்கத் துவங்குகிற எறும்புகளை துவம்சம் செய்து விடுகின்றன அங்குள்ள பாம்புகள்...

சமயங்களில் படமெடுத்துக் கொண்டு ஒரு போடு போட வருகிற பாம்புகளைக் கூட பட்டாம்பூசிகள் கொன்று விடுகின்றன..

"எங்கடா அடிக்கடி போயிடறே ?" என்று கேட்கிற அம்மாவை சமாளிப்பது சற்று அசௌகரியமாகப் படுகிறது.., ஆகவே, அப்பாவிடம் சொல்லி அடிவாங்கி அம்மாவை அழவைத்து சிரிப்பதில் ஓர் அலாதி ஆனந்தம்... அப்பாவும் அதே கேள்வியை கேட்கையில் ஓங்கி அறைவது தான் நியாயம் என்று நான் அடித்து சொல்வேன்...

அம்மாவை அறைந்த கையோடு தனது அறைபட்டு சிவந்த அந்த முள்தாடி கன்னத்தையும் தேய்த்துக் கொள்கிற எனது அப்பாவைப் பார்க்க எனக்கு சிரிப்பு தலைக்குப் புரை ஏறும்..

நாளடைவில் எனது இருப்பு காட்டு விலங்குகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்து விட்டது... ஜில்லா கலெக்டருக்கு மனு கொடுக்க குரங்கும் மயிலும் சென்று வந்ததாகக் கேள்வி..

"என்ன மயிலு.. ஒடம்புக்கு எப்டி இருக்கு?" என்ற எனது கேள்வியை புரிந்து கொண்டது மயில்.. "கொசுவ வுட்டு கடிக்க சொன்னேன்னா டெங்குல எல்லாரும் போயி சேர்ந்துடுவீக... ஜாக்ரதை.." என்றதும் காடே மிரண்டது..

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...